நடிகர் விஜய்யின் தந்தை மீது பணம் மோசடி புகார்

டிராபிக் ராமசாமி தமிழ் படத்திற்காக ரூபாய்.21 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து இயக்கி தயாரித்த படம் டிராபிக் ராமசாமி. இந்த படம் ஓராண்டுக்கு முன்பு திரைக்கு வந்தது.

இந்தப் படத்தின் தமிழ்நாடு ஒளிபரப்பு உரிமத்தை 3 கோடி ரூபாய்க்கு தருவதாக கூறி, அமெரிக்க குடியுரிமை பெற்ற தமிழகத்தை சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம் முன்பணமாக 21 லட்சம் ரூபாய் பணத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

 

ஆனால் சில நாட்கள் கழித்து இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரே வெளியிட உள்ளதாகவும், அதனால் பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திடம் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவதாக் கூறியும்  ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து சில நாட்கள் கழித்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பிரம்மானந்தம் சுப்பிரமணியனிடம் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பணத்தை திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரின் சார்பில் தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார்.