கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல்் தமிழிசைக் கொண்டாட்டம்

சென்னை 24 ஏப்ரல் 2021

கவிப்பேரரசு வைரமுத்து வின்
நாட்படு தேறல்் தமிழிசைக் கொண்டாட்டம்

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர்

ஏப்ரல் 18 முதல் பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது.

நாட்படு தேறல் தொடரின் இரண்டாம் பாடலாக ‘இந்த இரவு தீர்வதற்குள்ளே’ என்ற பாடல் நாளை வெளிவருகிறது. இசை : அனில் ஸ்ரீநிவாசன், குரல் : ஆர்.பி.ஷ்ரவண், இயக்கம் : அருள்.எஸ்

பாடல் வரிகள் :
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஒருகோடி மொட்டுக்கள்
உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள்
உதிர்ந்திருக்கும்
எத்தனையோ கருப்பையில்
உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில்
நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
உன்னைநான் முத்தமிடத்
தடையுண்டோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
*
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
மென்காற்று கண்டங்கள்
கடந்திருக்கும்
வெண்ணிலவு ஒருகீற்று
வளர்ந்திருக்கும்
கண்ணாடிக் கோப்பைகளும்
கன்னிமையும் உடைந்திருக்கும்
முன்னிரவில் பலர்செய்த
பாவங்கள் மறந்திருக்கும்
உயிர் ரெண்டும் இடம்மாறத்
தழுவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்​
சமூக இடைவெளி?
*
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
அழகான கவிதைவரி
விழுந்திருக்கும்
அரசாங்கச் சதியொன்று
முடிந்திருக்கும்
சிறைவாசக் கைதிக்கு
நாளொன்று குறைந்திருக்கும்
சேயொன்று கருப்பையில்
சிலபொழுது புரண்டிருக்கும்
உறவேதும் நேராமல்
பிரிவாயோ பைங்கிளி?​​
உனக்கும் எனக்கும் ஏன்​
சமூக இடைவெளி?

error: Content is protected !!