21 வருடத்துக்கு பிறகு மீண்டும் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கும் ‘நான் கடைசி வரை தமிழன்”திரைப்படம்!!

21 வருடத்துக்கு பிறகு மீண்டும் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கும் ‘நான் கடைசி வரை தமிழன்”திரைப்படம்!!
சென்னை 03 செப்டம்பர் 2023 சி.ஆர்.டி நிறுவனம் சார்பில் எம்.ஏ. ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ” நான் கடைசி வரை தமிழன்” .இப்படத்துக்கு பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
நான் கடைசி வரை தமிழன் படத்தின் தொடக்க விழா சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் தாரை தப்பட்டை முழங்க பூஜையுடன் நடந்தது.
பின்னர் டிஜிட்டல் தியேட்டரில் பட பெயர் அறிவிப்பு விழா நடந்தது.
இதில் பிரபல இயக்குனரும், இப்படத்தின் இசை அமைப்பாளருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகர் தயாரிப்பாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.ஏ. ராஜேந்திரன் பேசியது…
நான் கடைசி தமிழன் பட தொடக்க விழாவிற்கு வந்து கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் அனைவரும் நமது சகோதர சகோதரிகளே.
நாம் இந்துவாக முஸ்லீமாக கிறிஸ்தவனாக இருக்கலாம் ஆனால் முதலில் மனிதனாக இருப்போம்.
தமிழன் என்றாலே அது வரலாறு, என் தமிழுக்கு பல பெயர்கள் உண்டு அருந்தமிழ், செந்தமிழ், தீந்தமிழ்.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்விழாவுக்கு வந்திருக்கும் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர், சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர் அன்புச் செல்வன், இமான் அண்ணாச்சி, நிர்மல், ராஜா, ஜெய்பாபு, நடராஜன் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
நன்றி கடைசி வரை தமிழன் படத்தின் கதை மிகவும் மாறுபட்ட வித்ததில் அமைக்கப்பட்டுள்ளது.
தந்தை ஒரு விஞ்ஞானி,.மகன் ஒரு ராணுவ வீரன்.
இருவருமே நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறார்கள்.
எதற்காக,ஏன் என்பதுதான் கதை.
தமிழன் என்றால் சரித்திரம் படைப்பவன்.
ஆங்கிலத்தில் அவதார் 2ம் பாகம் படம் 160 மொழியில் எடுக்கப்பட்டது.
அதை மிஞ்சும் வகையில் 163 மொழியில் நான் கடைசி வரை தமிழன் படம் உருவாகிறது.
எந்த மதமாக இருங்கள் நாம் முதலில் மனிதனாக இருப்போம் அவதாா் படம் சாத்தியம் என்றால் நான் கடைசிவரை தமிழன் படமும் சாத்தியமாக்குவேன் தமிழன் என்றால் என்றென்றும் உலக வரலாறு தான்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
நடிகர் கராத்தே ராஜா பேசியதாவது…
இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. சிறுபிள்ளையாக இருந்தபோது டி.ராஜேந்தர் பாடல்கள் என்றால் தாளம் போட்டு பாடிக்கொண்டே இருப்பேன்.
அவரது பாடல்கள் எனக்கு பிடிக்கும்.
நான் கடைசி வரை தமிழன் என்று படத்தின் பெயரை கேட்டாலே மனதில் பதியும் அளவுக்கு அருமையான டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் எம்.ஏ. ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.
இப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
நடிகர் இமான் அண்ணாச்சி பேசியதாவது…
நான் கடைசி வரை தமிழன் 163 மொழிகளில் இப்படம் உருவாகிறது.
இப்படத் தொடக்க விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி.
இந்நிகழ்ச்சியின் மிகச் சிறப்பு என்னவென்றால் தமிழ் திரையுலகையே ஆட்டிப்படைத்த ஒரு ஜாம்பவான் டி.ஆர் இங்கு வந்திருப்பதுதான் .
கொஞ்ச நாளாவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கொடுக்கலாம் என்ற பேச்சு நடக்கிறது.
என்னைக் கேட்டால் அந்த பட்டத்தை டி.ராஜேந்தருக்கு தரலாம்.
(இப்படி சொன்னவுடன் டி.ராஜேந்தர் எழுந்து அதெல்லாம் வேண்டாம் என்றார்).
ஆர். கே. அன்புசெல்வன் பேசியதாவது…
நான் கடைசி வரை தமிழன் என்ற டைட்டிலை கேட்கும்போதே வீரம் வெறி பிறக்கிறது.
இப்படத்துக்கு பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கிறார்.
திரைப்பட டைட்டிலை கேட்டவுடனே அவர் இசை அமைக்க ஒப்புக்கொண்டார்.
பண்ணாரி அம்மன் என்ற படத்திற்கு இசை அமைத்தவர் 21 வருடத்துக்கு பிறகு மீண்டும் வெளிப்படத்துக்கு அவர் இசை அமைப்பது மிகுந்த மகிழ்ச்சி.
இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் பேசியது…
இந்த படத்துக்கு நான் கடைசி வரை தமிழன் என்று பெயர் வைத்திருப்பதாக இயக்குநர் எம் ஏ.ராஜேந்திரன் கூறினார்.
ராஜேந்திரன் என்று சொன்னாலே திறன் அந்த திறன் இந்த ராஜேந்திரன் இடத்தில் இருக்கிறது.
பண்ணாரி அம்மன் படத்துக்கு பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன்.
இந்த பட டைட்டிலில் தமிழன் என்ற ஒரு வார்த்தைதான் இப்படத்துக்கு நான் இசை அமைக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம்.
நான் முருகனை அழைத்தால் சத்தத்தோடு கூப்பிடுவேன்.
முருகன் என்றால் தமிழ், நான் கடைசி வரை தமிழன் படத்தில் தமிழ் இருக்கிறது.
இயக்குனர் ராஜேந்திரனிடம் எனக்கு பிடித்தது பிடிவாதம் நானும் பிடிவாதக்காரன்.
இயக்குனர் இராஜேந்திரனிடம் ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க, உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரை தமிழன்னு, சொல்லுங்க, மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க என்றேன்.
இல்லை சார். கடைசி வரை தமிழன் தான் எனக்கு பிடித்திருக்கிறது என்றார்.
அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது மலைப்பு தமிழன் என்றால் இனிப்பு.
அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது.
இன்னும் சொல்ல வேண்டு மென்றால் திரைப்படத்துக்கு தமிழில் டைட்டில் வைத்திருக்கிறார்.
அதனால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்….











