அகில இந்திய நடிகர் விஜய்சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அகில இந்திய நடிகர் விஜய்சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக தலைமை செயலாளர் குமரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், நடிகர் விஜய்சேதுபதி கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சியில் ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் கிரேஸி மோகன் மேடையில் பேசிய நகைச்சுவை வசனத்தை அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

இந்த நகைச்சுவை வசனத்தை முற்றிலுமாக மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியது போல் காணொளியை எடிட் செய்து சமூக வலைதளத்தில் விஷமிகள் சிலர் பரப்பி வருகிறார்கள்.

இதனால் சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் சிலர் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர்.

மேலும் இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும்,சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே உடனடியாக நடிகர் விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும்,விஷமிகள் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில், “சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது.

அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது” என்றார்.

உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடை மாற்றுவதை மூடிவிட்டார்கள்” என்று பேசியதற்கு அகில இந்திய இந்து மகாசபை சார்பில் புகாரளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!