எனது குறும்படத்தை எதிர்ப்பதா இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.
நான் இந்த குறும்படத்தில் கள்ளக்காதலை பற்றி படமாக்கியதாக கூறி சிலர் எனது குறும்படத்தை எதிர்க்கிறார்கள் என்று இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நிலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.
இதில் குறும்படத்தில் நடிகர் சிம்புவும் நடிகை திரிஷாவும் வீட்டில் இருந்தப்படியே நடித்து இருக்கிறார்கள்.
2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஒரு பகுதியாக இந்த குறும்படம் தயாராகி உள்ளது.
இந்த ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தில் திருமணமாகி குழந்தைகளுடன் கேரளா மாநிலத்தில் வசிக்கும் தனது முன்னாள் காதலி நடிகை திரிஷாவிடம் போனில் பேசும் நடிகர் சிம்பு இப்போதும் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வது போன்ற வசனம் உள்ளது.
இதற்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கள்ளக்காதலை ஊக்குவிப்பதுபோல் குறும்படத்தை எடுத்து இருப்பதாகவும் இளைஞர்கள் மனதில் விஷத்தை கலக்க வேண்டாம் என்றும் கவுதம் வாசுதேவ் மேனனை பலரும் கண்டித்தனர்.
இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து கவுதம் வாசுதேவ் மேனன் கூறியிருப்பதாவது:
“நீங்களும் உங்கள் முன்னாள் காதலியை அழைத்து பேசுங்கள் என்று சொல்வதற்காக நான் இந்த குறும்படத்தை எடுக்கவில்லை.
இது ஜெஸ்ஸி, கார்த்திக்கின் கதை. நான் எழுதிக்கொண்டிருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 பாகத்தில் திரைக்கதையில் உள்ள ஒரு காட்சிதான் இது. பார்ப்பவர்களுக்கு அது கள்ளக்காதல் போன்று இருந்தாலும் அது எனக்கு அப்படி தோன்றவில்லை.
எப்போதுமே எனது திரைப்படங்களுக்கு பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் சுமாரான திரைப்படம் என்று கூறியவர்களும் இருந்து இருக்கிறார்கள்.
எனது திரைப்படங்களின் விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
ஒரு சிலர்தான் திரைப்படத்தை வசைபாடுகின்றனர்.” என்று கவுதம் வாசுதேவ் மேனன் கூறினார்.