சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பங்கேற்க, பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்.,துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை வருகை குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்” என்று பதிவு செய்துள்ளார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம், மோடி, திருவிடந்தை சென்றார். அங்கு, அவரை, அமைச்சர்கள் மாபா.பாண்டியராஜன், பெஞ்சமின், அதிகாரிகள் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு கிளம்பி சென்றார். மோடி செல்லும் வழி நெடுகிலும் கூடியிருந்த பா.ஜ., தொண்டர்கள், ‘மோடி, மோடி’ என கோஷம் போட்டனர். அவர்களை நோக்கி மோடி கையசைத்தவாரே சென்றார்.