ஜெய்பீம்’ திரைப்பட நிஜ நாயகி பார்வதி அம்மாளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்!
சென்னை 12 ஜூன் 2022 ஜெய்பீம்’ திரைப்பட நிஜ நாயகி பார்வதி அம்மாளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்!
கடந்த வருடம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை ‘வலைப்பேச்சு’ மூலம் நடிகர் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிந்து கொண்டார்.
ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு அவரது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்ததை அனைவரும் அறிவீர்கள்.
சென்னை புறநகரான முகலிவாக்கத்தில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஒரு லட்சரூபாய் வழங்கியதோடு, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் என்ற கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டனர்.
அதன்படி கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்ததோடு, அங்கே வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் ராகவா லாரன்ஸ் இறங்கிய நேரத்தில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தகவல் வெளியானது.
பார்வதி அம்மாவின் வறுமை நிலையை அறிந்து அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் அப்போது தெரிவித்திருந்தார்.
அதேநேரம் அவர் வாக்குக்கொடுத்தபடி, பார்வதி அம்மாவுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்கு ஒதுக்கிய தொகையை அவர்களுக்கு பணமாக வழங்குவது என்று முடிவு செய்து, அதன்படி, பார்வதி அம்மாவின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா, மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார்.
பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த திரு.சூர்யா, திருமதி.ஜோதிகா, இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் மற்றும் வலைப்பேச்சு நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.











