பிரபல தயாரிப்பாளர் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் !*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் படங்களின் தயாரிப்பாளரான லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.

நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படம் உலகிற்கு தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மூலம் பல்வேறு படங்களை இவர் தயாரித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தைத் தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது அவர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது என்று பல உதவிகளைச் செய்து வருகிறார் திரைப்பட தயாரிப்பாளர் சுபாஸ்கரன். அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டி இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

லைகா குழுமம், இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபிரிவான லைகா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதலிடத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.