விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு இறந்தவர் குடும்பத்துக்கு ரூபாய் 1 கோடி அறிவித்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பால் பலர் உயிரிழந்து வரும் இந்த நிலையில் இன்று அதிகாலை விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு மக்களிடையே அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் விவரம் வருமாறு…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த ஆலையிலிருந்து ரசாயன விஷ வாயு கசிந்து வெளியேறி காற்றில் கலந்து அங்கு உள்ள மக்கள் அனைவரும் பதிக்கப்பட்டு உள்ளார்கள்.
இதனால் அந்த பகுதியுள்ள மக்கள் மூச்சுவிட கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.
பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை ஒரு குழந்தை உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவில்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடியாக அறிவித்தார்.
மருத்துவனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
வாயு கசிவு ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சில அறிவுரைகளை தெரிவித்துள்ளனர்.
மக்கள் ஈரத்துணியால் முகத்தை மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும்,
தோலில் அரிப்பு ஏற்பட்டால் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
நன்றாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
கண் எரிச்சல் ஏற்பட்டால் கண்களை நன்றாக நல்ல தண்ணீரால் கழுவ வேண்டும்,
உடல்நிலையில் வேறு மாற்றம் ஏற்பட்டு அசவுகரியமாக உணர்ந்தால் உடனடியாக 108-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்
என அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இந்த விசாகப்பட்டினம் ரசாயன வாயு கசிவு குறித்து விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.