ஒற்றுமை வேண்டும்; வன்முறை வேதனை அளிக்கிறது.. – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் உருவாகியுள்ளன.
குறிப்பாக அஸாம், மிசோரம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரங்கள் வெடித்துள்ளன.
கேரளா அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இதனை ஆதரித்துள்ளன.
குடியுரிமை சட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நள்ளிரவே, மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதனால் நாடு முழுவதிலும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
முக்கியமாக டில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் இதுபற்றி தர்பார் டிரைலர் விழாவில் கருத்து தெரிவிக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது இதுபற்றி பேசியுள்ளார்.
அதில்…
எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண் வன்முறையோ, கலவரமோ ஒரு வழியாகி விடக் கூடாது. தேசப் பாதுகாப்பும், நாட்டு நலனையும் மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையோடும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை எனக்கு வேதனை அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.











