தமிழ் திரைத்துறைக்கு ஊரடங்கு உத்தரவில் தளர்வு கேட்கும் தமிழ்த்திரைப்படம் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ( பெப்சி ) தமிழக அரசு ஏற்க்குமா.?
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க மே 17 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஆனால் இன்று மே 4 முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை சில மாநிலங்கள் அறிவித்துள்ளன.
அதாவது சில வணிகங்களுக்கு மட்டும் சில விதிமுறைகளுடன் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளன.
இது பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டலங்களை பொறுத்து மாறுப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.
இந்த நிலையில் இது போன்று தமிழ் திரைப்பட உலகில் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வேண்டும்
என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நமது தமிழ் திரைப்படம் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ( பெப்சி ) தலைவர் ஆர்கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ் திரைப்படம் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ( பெப்சி ) தலைவர் ஆர்.கே.செல்வமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“தற்போது ஊரடங்கு சட்டம் போடப்பட்டு ஏறக்குறைய 50 நாட்களை தொட இருக்கிறோம்.
கொரோனா வைரஸ் பாதிப்பினை கருதி மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50-வது நாளை கடக்க உள்ளோம்.
வெற்றிகரமான 100 நாள், வெள்ளிவிழா, பொன்விழா என திரைப்பட வெற்றிகளைச் சந்தோஷமாகக் கொண்டாடிய திரைப்படத்துறை இந்த வேலை முடக்கப்பட்ட 50-வது நாள் என்று அறிவிக்கக்கூடிய துர்ப்பாக்கியமான துன்பமான சூழ்நிலையில் உள்ளோம்.
தமிழ்த்திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் ரூ.1,000/- மும், தமிழ்த்திரைப்பட கலைஞர்கள் மூலம் பெறபட்ட நன்கொடை வழியாக 1,500 ரூபாய்க்கான உணவுப்பொருள்களும், அமிதாப் பச்சன் மூலம் சோனி டிவி மற்றும் கல்யாண் ஜூவல்லரி வழங்கிய ரூ.1,500 மதிப்பிலான உணவுப்பொருள்களும் ஏறக்குறைய ரூ.4,000 ரூபாய்க்கான உணவுப் பொருள்களை வைத்து இந்த 50 நாள் வேலை முடக்கத்தில் பசிப்பிணியில் இருந்து எங்கள் தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி உள்ளோம்.
இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசிப்பிணியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது 17 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதைப் போல் திரைப்படத்துறைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனைகளோடு அனுமதி வழங்கிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறைந்த பட்சம் திரைப்படங்களுக்குப் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ-ரெக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் பணி செய்ய வைக்க இயலும், என்பதால் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் மற்றும் தொலைக்காட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புகளுடன் சுகாதாரமான முறையில் இந்த பணிகளைச் செய்வோம் என்று உறுதி அளிக்கின்றோம்”
இவ்வாறு தமிழ்த்திரைப்படம் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ( பெப்சி ) தலைவர் ஆர்.கே.செல்மவணி தெரிவித்துள்ளார்.