சமூக வலைதளங்கள் சினிமா, நாடகத்தை பாதிக்கிறது – நடிகர் சௌந்தரராஜா !!

சமூக வலைதளங்கள் சினிமா, நாடகத்தை பாதிக்கிறது – நடிகர் சௌந்தரராஜா !!

சென்னை 03 செப்டம்பர் 2024 நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி.

இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நடிகர், இயக்குநர் சேரன் பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். ஒரு மாலை வேளையில் நாடகம் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது.

இங்கு நாடக கலைஞர்களால் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

முழுக்க முழுக்க புராணமாக இல்லாமல், இந்த கால விஷயங்களை சேர்த்து நக்கலும், நையாண்டியாகவும் செய்திருந்தது அருமையாக இருந்தது.

அர்ஜூன் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.

இதை நிறைய பேர் வந்து பார்த்ததில் மகிழ்ச்சி. இதை சிறப்பாக இயக்கி இருந்த விஷயம் பாராட்டுக்குரியது,” என்றார்.

நடிகர் சௌந்தரராஜா பேசும் போது…

மண்ணுக்கும் மக்களுக்கும் வணக்கம்.

நான் ஒவ்வொரு வருஷமும் இங்கு வர காரணம் தேவி மட்டும் தான்.

நான் நாடகங்களை பார்த்து வளர்ந்தவன்.

நான் நாடகம் நடிக்க ஆசைப்பட்டவன்.

ஆனால், என்னால் அப்படி ஆக முடியவில்லை.

அதற்கான பயிற்சியை நான் முறையாக எடுக்கவில்லை.

அப்படியே சென்றுவிட்டது. என் சிறுவயதில் மதுரை மாவட்டத்தை சுற்றி விழாக்கள் என்றாலும் துக்க வீடு என்றாலும் அங்கு கலை ஏதாவது ஒரு வடிவில் நிச்சயம் இருக்கும்.

அதுவே நான் நடிகன் ஆவதற்கும் ஆசையை தூண்டியது.”

அண்ணன் கூறியதை போல், கலையை அதன் உண்மை வடிவம் மாறாமல் செய்ய வேண்டும் என்று தேவி கூறுவார்.

எனக்கு கோபம் தான் வரும்.

சில விஷயங்களை வணிகமாக செய்ய சொல்வேன், ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார்.

நிறைய பேரிடம் கட்டணம் கூட வாங்காமல் பயிற்சி அளித்துள்ளார் தேவி.

அதற்கு காரணம் அவர்களிடம் உண்மையான திறமை இருக்கும் என்பது மட்டும் தான்.”

இந்த காலத்தில் நடிகர்களுக்கே பொருளாதார ரீதியில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது.

ஆனால் நாடகத்தின் நிலை இன்னமும் மோசம்.

அவர்களுக்கு ஒரு வைராக்கியம் உண்டு.

அதை சொல்லும் போதே எனக்கு புல்லரிக்கிறது.

கதையில் முக்கியத்துவம் இருக்கிறதா, வசனம் இருக்கிறதா என கேட்டு, அப்படி இருந்தால் மட்டும் தான் ஒப்புக்கொள்வார்கள்.

அந்த தைரியம் உண்மையில் பாராட்டுக்குரியது.”

“தேவியின் வளர்ச்சிக்கும், நாடகத்தின் வளர்ச்சிக்கும் நான் எப்போதும் ஒரு சிறு கல்லாக இருப்பேன்.

இன்ஸ்டாகிராம் காலக்கட்டத்தில் இன்று எல்லாரும் நடிகர், நடிகை, கேமராமேன் ஆகிவிடுகிறார்கள்.

நான் பொறாமையில் எதையும் கூறவில்லை.

தொழில்நுட்ப யுகத்தில் ஒருதுறை வளர ஒரு துறை அழியும். அனைவரும் மறைமுகமாக இன்ஸ்டாகிராமுக்கு வேலை பார்க்கிறோம்.

இந்த காலத்து இளைஞர்கள் பிரபலமாக, ஒரு சிற்றின்பத்திற்காக அதில் நேரத்தை செலவிடுகின்றனர்.

சிலர் அதை வேறுவிதமாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.

அது நல்லவிதமாக இருந்தால் சரிதான். ஆனால் அவை சினிமா மற்றும் நாடகத்தை பாதிக்கிறது.

அந்த வருத்தத்தை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.”

இங்குள்ள கலைஞர்கள் கலையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக மற்ற பணிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை கடினமாக உழைத்துள்ளனர்.

இவர்கள் தான் நடிகர்களாக வருவதற்கான விதை. இந்த விதைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்தார்.

நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசும் போது…

நான் பேச நினைத்ததை அனைவரும் பேசிவிட்டனர்.

இங்கு அண்ணன்களோடு அமர்ந்திருந்தது பெருமை.

நாடகக் கலையை விடாமல் இன்னும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடித்த அனைவரும் ஒன்றிரண்டு வேஷங்களில் நடித்தது சுலபமான விஷயம் இல்லை.

ஒரே ஷாட் நடித்துவிட்டு, எனக்கு அசதியாக இருக்கிறது என கூறிய பல நடிகர்கள் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இவ்வளவு நேரம் எந்த தொய்வும் இன்றி நடித்த அனைவருக்கும் உண்மையில் பாராட்டுக்கள்.

உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு.

இதே நாடகத்தை சில ஆண்டுகளுக்கு முன் தேவி அவர்கள் நடித்திருந்தார்கள்.

அதையும் நான் பார்த்திருக்கிறேன்.

எந்த நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை.

அந்த வகையில் இன்று நீண்ட நாட்கள் கழித்து  சர்பிரைசாக அண்ணன் சேரனை சந்தித்தேன்.

தம்பி மற்றும் நண்பன் ஆனந்த கண்ணனின் துணைவியாரை சந்தித்தேன்.

மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த காலை இன்னும் உயர வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும், வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.

ஆர்.ஜே.ஆனந்த கண்ணனின் மனைவி ராணி கண்ணா பேசும் போது,…

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனந்த் இங்கு வந்திருந்தால், துள்ளி குதித்து நிறைய விஷயங்களை செய்திருப்பார்.

அவர் சார்பில் இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

மேடை நாடகங்கள் சவுகரியமானது இல்லை, அவை அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று கூறுவார்கள்.

அத்தகைய நாடக கலையை தேவி சிறப்பாக செய்து வருகிறார்.

இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

சினிமாவை தேடி ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் நாடக கலைக்காக நான்கு மாதங்கள் ஒதுக்கி, கடினமாக உழைத்திருக்கிறீர்கள்.

இது உங்களை நிறைய இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வந்து பார்த்த நீங்கள் இல்லாமல் நாடக கலையே இல்லை, நேரம் ஒதுக்கி இங்கு வந்து பார்த்த உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி,” என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் ஐ லியோனி பேசும் போது,…

நடிப்புக்கான பயிற்சி அளிக்கும் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது.

ஆனால், இதுபோன்ற நாடகங்களை நடத்தி, இதற்காக பயிற்சி பெறுபவர்கள் தான் மிக சிறந்த நடிகர்களாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

நீண்ட நாள் கழித்து மேடையில் இவர்களுடன் அமர்ந்து இருக்கிறேன்.

பாரதி கண்ணமா தொடங்கி, திரையுலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கி வெற்றிக் கொடிக் கட்டிய என் அருமை சகோதரர் சேரன்.

அவர் எப்பவும் இதேபோல் எளிமையாக தான் இருப்பார்.

சில இயக்குநர்களை பார்த்தால், கூடவே ஒரு உதவியாளரை வைத்துக் கொள்வார்கள்.

புகழின் உச்சத்தில் இருந்த போதும், தற்போது அதைவிட பெரிய இடத்தில் இருக்கும் போதும் ஒரே மாதிரி இருக்கக்கூடிய அற்புதமான இயக்குநர்.

அவருடன் இன்று இங்கு இருந்தது எனக்கு மகிழ்ச்சி.”

இதேபோல் எனது அருமை சகோதரர் சமுத்திரக்கனி, இன்றைய உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.

அவர் இந்த நிகழ்ச்சிக்கு எளிமையாக வந்து நம்முடன் அமர்ந்து இருப்பது பெரிய அதிசயம் தான்.

சுப்ரமணியபுரம் தொடங்கி ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.”

அவரும், தம்பி ராமையும் உருவாக்கிய சினிமா விநோதய சித்தம்.

அந்த படத்தை நான் பிரீவியூ பார்த்தேன். அந்த படம் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

மேடை நாடகத்தை படமாக்கியது தான் விநோதய சித்தம்.

அந்த படத்தின் கதை ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி தான் இந்த உலகம் பேசும் என்று எல்லாரும் நினைப்போம்.

அந்த படத்தில் உயிரிழந்த பிறகு தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை பார்க்க தம்பி ராமையா வருவார்.

அப்போது ஒருத்தர் கூட அவரை பற்றி சிந்திக்க மாட்டார்கள்.”

மனிதன் உயிரோடு இருக்கும் வரை தான் அவனுக்கு வாழ்க்கை.

இறந்த பிறகு அவன் எப்படி இருக்கிறான் என்பது அவனுக்கும் தெரியாது. அவனோடு வாழ்பவருக்கும் தெரியாது என்ற கதையை சொல்லியிருந்தார்கள்.

அந்த படத்தில் என் அருமை தம்பி சமுத்திரகனி அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தம்பி சௌந்தரராஜா வந்திருக்கிறார்.

தேவியை பார்க்கும் போது என்னை போன்ற வாத்தியார்கள் தான் நினைவுக்கு வருகின்றனர்.”

“நாங்கள் பெரிய அதிகாரிகள், மருத்துவர்களை உருவாக்குவோம், கடைசி வரை வாத்தியார்களாகவே இருப்போம்.

ஏற்றி வைக்கும் ஏணி போன்றுதான் தேவி. அவர்கள் மூலம் ஏனியில் ஏறி பலர் நட்சத்திரங்களாக மிளிர்கின்றனர்.

ஆனால் ஏணியாகவே இருப்பதில் மகிழ்ச்சியாக இருப்பவர் தேவி. இப்படி ஏணியாக இருப்பது வளர்ச்சிக்கு ஏணியாய், வாழ்க்கைக்கு தோனியாய் இருக்கும் உங்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.

இந்த நாடகத்தில் நடித்த ஒவ்வொருத்தரையும்  தனித்தனியாக பாராட்டுகிறேன்.

ஒரு சினிமா உருவாக்கப்படுவது, ஆனால் நாடகம் தான் நடிக்கப்படுவது.

நாடகம் தான் செயலாக்கத்தின் உச்சக்கட்டம். சினிமாவை உருவாக்கலாம்.

ஆனால் நாடகம் நடித்துக்காட்டுவது.

ஆதி மனிதன் முதலில் நடிக்கத் தான் செய்தான். மொழி இன்றி அவர்கள் செய்கையில் தான் தகவல் பரிமாற்றம் செய்திருப்பார்கள்.

இங்கிருந்து இசை, வார்த்தைகள் மற்றும் பேச்சு என எல்லாமே காலப்போக்கில் உருவானவை தான்.

இன்று நாம் இயல், இசை, நாடகம் என கூறுகிறோம்.

ஆனால் முதலில் வந்தது நாடகம் தான். அதன்பிறகு வந்தது தான் இசை, அதன்பிறகு வந்தது தான் இயல்.”

“மனித வாழ்வில் ஒன்றியிருப்பது நாடகம் தான்.

நாடக கலையை அவரது குரு முத்துசாமியின் நினைவாக நடத்தி வரும் தேவி அவர்களின் மிகச் சிறந்த பணி நிச்சயம் வெல்லட்டும், வாழட்டும். தொடர்ந்து இந்த கலையை அவர்கள் காப்பாற்றட்டும்.

நாடகத்தில் நடித்த எல்லாரும் சிறப்பாக நடித்தார்கள். நடித்த எல்லாருக்கும் பாராட்டுக்கள்.

இதை இயக்கிய அருமை சகோதரி தேவிக்கு வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!