எரிகாற்று உருளையின் (சிலிண்டர்) விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- சீமான்.

சென்னை 19 ஆகஸ்ட் 2021 எரிகாற்று உருளையின் (சிலிண்டர்) விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்- சீமான்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச் சூழலால் நாடெங்கும் வாழும் மக்கள் பொருளாதார நலிவுக்குள்ளாகியுள்ளனர்.

நிர்கதியற்று நிற்கும், அவர்களது வாழ்வாதார இருப்புக்கு எதுவொன்றையும் செய்யாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, எரிகாற்று உருளையின் (சிலிண்டரின்) விலையை 25 ரூபாய் ஏற்றி, 875 ரூபாயாக உயர்த்தியிருப்பது மக்கள் மனங்களில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் வரலாறு காணாத விலையேற்றத்தாலும், அதனால் விளைந்த அத்தியாவசியப் பொருட்களின் கட்டற்ற விலை உயர்வாலும் நாட்டு மக்கள் பெருந்துயருக்கு ஆளாகியுள்ளனர்.

அன்றாட செலவினங்களையே எதிர்கொள்ள முடியாது மக்கள் திணறிக் கொண்டிருக்கையில், இப்போது எரிகாற்று உருளையின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது அவர்கள் தலையில் விழுந்த பேரிடியாக அமைந்திருக்கிறது.

தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான பொருளாதார முடிவுகளாலும், கூட்டிணைவு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான சலுகைகளினாலும் நாட்டின் பொருளாதாரத்தைபுதைகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளது ஆளும் மத்திய அரசு.

இப்போது அதனை சமப்படுத்த மக்களின் தலை மீது சுமையை ஏற்றும் பாஜக அரசின் கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

ஏழை, நடுத்தர வர்க்கத்து மக்களைப் பற்றி துளியளவும் சிந்திக்காது தனிப் பெரு முதலாளிகளின் இலாப வேட்டைக்கு வாசல் திறந்துவிடும் பாஜக அரசின் இச்செயல் வெட்கக்கேடானது.

மனிதநேயமோ, மக்கள் பற்றோ இல்லாது, அதிகாரத் திமிர் கொண்டு, தான் தோன்றித்தனமாக குடிகளை நாளும் வாட்டி வதைக்கும் பாஜகவின் ஆட்சி மனிதகுலத்திற்கே எதிரானது!

மக்களை வதைக்கும் இவ் விலையுயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர். நாம் தமிழர் கட்சி.