பிகில் படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில் பிகில் படத்தில் இருந்து முதல் பாடல் ‘சிங்கப்பெண்ணே’ சில தினங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் குரலில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்த இந்த பாடல் யூடியூப்பில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதுவரை 90 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பாடலை பார்த்துள்ளனர். அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ளது பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது.
இந்நிலையில் பிகில் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடையும் என்று தெரியவந்துள்ளது. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் சூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தொடங்க இருக்கிறது.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள பிகில் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்காது என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது











