எடுபுடி அரசு தவிடு புடியாகும்; இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து விசாரணைக்கு கமல்ஹாசன் தொண்டர்கள் கண்டனம்!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் நடைபெற்றது.
இந்நிலையில், கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தியதை கண்டிக்கும் விதமாக ‘இந்தியனுக்கே விசாரணையா? வீணர்களே’ என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், அதில், “வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து; இது தான் தமிழனின் கெத்து. குனிந்து கும்பிடு போடும் முட்டாள் அரசியல்வாதிகளே முடிந்தால் களத்தில் வந்து மோது. இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு” என்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு போஸ்டரில் எடுபுடி அரசு தவிடு பொடியாகும் என அச்சடித்துள்ளனர்.
இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.