நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என பாமக, வன்னியர் சங்கம் மிரட்டல் – தமுஎகச கண்டனம்.
சென்னை 08 மார்ச் 2022
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப் படத்தைத் திரையிடக் கூடாது என பாமக, வன்னியர் சங்கம் மிரட்டல் – தமுஎகச கண்டனம்.
திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் 10.03.2022 ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தை திரையிட கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டி வருவதற்கு தமுஎகச கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்து விட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.
அந்த மிரட்டலின் தொடர்ச்சியில்தான் இப்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் திரைப்படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.











