பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா இன்று தூக்கிட்டு தற்கொலை.
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகை சித்ரா.
அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி ஜீ தமிழ் உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
மேலும் சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா.
இவர் நேற்று இரவு சின்னத்திரை படப்பிடிப்பு முடித்து விட்டு ஹோட்டல் ரூமுக்கு இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஈவிபி பிலிம் சிட்டியில் உள்ள ஹோட்டல் ரூமுக்கு வந்துள்ளார்.
அந்த ஹோட்டல் ரூமில் தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் ஒன்றாக தங்கி இருந்துள்ளார்.
இதனையடுத்து நடிகை சித்ரா ஹேமந்த் ரவியிடம் தான் குளிக்க செல்வதாகக் கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொல்லியுள்ளார்.
வெகு நேரமானதால் அறையின் ஹேமந்த் ரவி கதவை தட்டி பார்த்துள்ளார்.
வெகு நேரமாக கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஹேமந்த் ரவி ஹோட்டல் ஊழியரிடம் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், ஹோட்டல் ஊழியர் அந்த ரூம் மாற்று சாவி எடுத்து வந்து திறந்து பார்த்தபோது நடிகை சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இதுகுறித்து நசரத்பேட்டை காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருடைய மரணம் அவரது சின்னத்திரை ரசிக பெருமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
28 வயதில் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தது ஏன் என ரகிகர்கள் உருக்கமாக கேட்டு வருகிறார்கள்.
அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் தான் நடிகை சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபரை தான் அவரது பெற்றோர் பார்த்து சித்ராவிற்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து இருந்தனர்.
விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சித்ரா பங்கேற்ற போது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஹேமந்தை வரவைத்து அவரை ப்ரொபோஸ் செய்ய வைத்தனர்.
அதனை பற்றி நடிகை சித்ராவும் இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உண்டானாலோ உடனடியாக கீழ்காணும் அவசர உதவிமையம் எண்ணை தொடர்பு கொள்ளவும்: 104












