நாயகன்’ படம் புரமோஷனுக்கு இயக்குநர் மணிரத்னம் உதவினால் நன்றாக இருக்கும் டிஜிட்டலில் வெளியிடும் மதுராஜ் எதிர்பார்ப்பு!
‘நாயகன்’ படம் புரமோஷனுக்கு இயக்குநர் மணிரத்னம் உதவினால் நன்றாக இருக்கும் டிஜிட்டலில் வெளியிடும் மதுராஜ் எதிர்பார்ப்பு!
எண்பது தொண்ணூறுகளில் வெளியான திரைப்படங்கள் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோரின் திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அப்படி ரீ ரிலீஸ் செய்யப்படும் போதும் கூட அந்த திரைப்படங்கள் வெளியான சமயத்தில் பெற்ற அதே வரவேற்பை இப்போதும் பெற்று வருகின்றன.
குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களும் இது போன்ற திரைப்படங்களை பார்க்க ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, சிவாஜி தி பாஸ், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியான போது இன்றைய இளைஞர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் விரைவில் உலகநாயகன் கமலின் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு 1987ல் அவர் நடித்த நாயகன் திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இந்த திரைப்படத்தை தற்போது டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்கிறது SR பிலிம் பேக்ட்ரி நிறுவனம்.
இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமையை ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுராஜ் பெற்றுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் மாறுபட்ட நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில், பி.சி.ஸ்ரீராமின் அழகியல் ஒளிப்பதிவில் ஒரு மிகப்பெரிய கல்ட் கிளாசிக் படமாக நாயகன் வெளியானது.
சிறந்த நடிகர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படம் இன்றளவும் இது போன்று கல்ட் கிளாசிக் திரைப்படங்களை இயக்க விரும்பும் இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாடப்புத்தகமாகவே திகழ்கிறது.
டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியாக உள்ள நாயகன் தினபடம் குறித்து, தனது ஏடிஎம் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடும் விநியோகஸ்தரான மதுராஜ், நடிகர் அரீஷ்குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
விநியோகஸ்தரான மதுராஜ் கூறும்போது…
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரையரங்குகளில் வெளியானபோது, பொதுமக்கள் பலர் நாயகன் படத்தையும் இதேபோன்று டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதனால் வரும் நவம்பர் மாதம் மாதம் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை (நவ-7) முன்னிட்டு நவம்பர் 3ஆம் தேதி இந்த படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்கிறோம்.
மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் படங்களுக்கு இன்றைய இளைஞர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பும் வியாபாரமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் சமயத்திலும் அந்த வரவேற்பு எதிரொலித்தது. கிட்டத்தட்ட 25 நாட்கள் அந்த படம் திரையரங்குகளில் ஆரவாரத்துடன் ஓடியது. அதனால் நாயகன் படத்தை கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரிலீஸ் செய்வது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.
இந்த படத்தில் இருந்து ஒரு துளி அளவு கூட எந்த விஷயத்தையும் நாங்கள் மாற்றவில்லை. ஏனென்றால் அவ்வளவு சிறந்த படத்தை கெடுத்து வைத்துவிட்டார்கள் என்கிற பெயர் வந்துவிட கூடாது. அதேசமயம் இன்றைய சூழலுக்கு ஏற்ப இந்த படம் துல்லியமாக கலர் கரெக்சன் மேற்கொள்ளப்பட்டு 7.1, 5.1, டால்பி அட்மாஸ் என்கிற ஒலி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. அப்போது நாயகன் படம் பார்த்தவர்களுக்கு கூட இப்போது பார்த்தால் இன்னும் புதிதாக தெரியும்.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
திரைப்படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக இதன் டிரைலரை வெளியிட இருக்கிறோம்.
இதற்காக உலக நாயகன் கமல்ஹாசனை அணுகவும் இருக்கிறோம்.
இயக்குனர் மணிரத்னமும் புரமோஷனுக்கு உதவினால் நன்றாக இருக்கும்.
தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 120 திரையரங்குகளில் நாயகன் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து இது போன்று இன்னும் சில படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் எண்ணமும் இருக்கிறது.
அதுமட்டுமல்ல நாயகன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இதற்காக கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அதேசமயம் பில்லா திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டபோது எப்படி இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளப்பட்டதோ அதேபோன்று நாயகனும் புதிய வடிவத்தில் ரீமேக் செய்யப்படும்.
நாயகன் திரைப்படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்படுவது குறித்து நடிகர் அரீஷ் குமார் கூறும்போது…
நாயகன் திரைப்படத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது வயதைம் பிரதிபலிக்கும் விதமாக நான்கு விதமான தோற்றங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் அற்புதமாக நடித்திருந்தார்.
கிட்டத்தட்ட 30 வயதிலேயே அதுபோன்ற புதிய விஷயங்களை அவர் தைரியமாக மேற்கொண்டார்.
அது என்னைப்போன்ற இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஒரு நடிகன் இவ்வளவு உழைத்திருக்கிறான் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வேண்டும்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.











