அஞ்சாமை திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தன்யா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.பி. சுப்புராமன்.
ஒளிப்பதிவாளர் :- கார்த்திக்.
படத்தொகுப்பாளர் :- ராம்சுதர்சன்.
இசையமைப்பாளர் :- ராகவ் பிரசாத்.
தயாரிப்பு நிறுவனம் :- திருச்சித்திரம்.
தயாரிப்பாளர் :- டாக்டர் எம். திருநாவுக்கரசு எம்.டி.
ரேட்டிங் :- 4.5/5.
இந்தியா முழுவதும் ஒரே தேர்வான நீட் என்னும் தேர்வை கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் பரிந்துரைத்தது.
05 மே 2013 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கும் இரண்டெழுத்து சொல் என்றால், தற்போதைக்கு அது நீட் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்டபிரச்சினை அதனால் பறிபோன உயிர்கள் ஏராளம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நீட் தேர்வில் நடக்கும் பிரச்சனையை மாணவர்கள் வலியையும் காலில் கிடைப்பதை கழட்டி அடிப்பது போல் அஞ்சாமை திரைப்படத்தின் மூலம் இயக்குநர் சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் என்னும் கிராமத்தில் சர்க்கார் என்னும் கதாநாயகன் விதார்த் மற்றும் மனைவி கதாநாயகி வாணி போஜன் மற்றும் மகள் மகன் கிருத்திக் மோகன் பூக்களை பயிரிட்டு விவசாயம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
தனது மகனே பெரிய ஆளாக்க வேண்டும் என கஷ்டப்பட்டு படிக்க வைத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மாணவனாக வரும் கதாநாயகன் விதார்த் மகன் கிருத்திக் மோகன் மருத்துவ படிப்பு படிக்க ஆசைப்படுகிறார்.
மருத்துவப் படிப்பிற்காக புதிதாக நுழைவுத் தேர்வு நீட் எழுத வேண்டிய கட்டாயமாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள நீட் தேர்வு மையம் கேட்டதற்கு, ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த கிருத்திக் மோகன், தனது தந்தை கதாநாயகன் விதார்தும் நீட் தேர்வு எழுதுவதற்காக ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு அவர்களை எந்த மாதிரியான சிரமத்திற்கு ஆளாகிறார்கள்? அதனால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? அந்த இன்னல்களை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர்? என்பதுதான் இந்த அஞ்சாமை திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அஞ்சாமை திரைப்படத்தில் கதையின் நாயகனாக விதார்த் நடித்துள்ளார்.
கதாநாயகன் விதார்த் ஏழை விவசாயி அன்பான குடும்பத் தலைவன்.. பாசமான தந்தை என நிஜமாகவே சர்க்கார் என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்
நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவ மாணவிகளின் சிலர் தற்கொலை செய்து கொள்வதை தொலைக்காட்சியில் வரும் செய்திகள் மூலம் அறியும் கதாநாயகன் விதார்த், தன் மகனை நினைத்து பதறிப்போய் குடிப்பதும். சீலிங் மின் விசிறிக்கு பதிலாக, சுவற்றில் மாட்டும் பேன் வாங்கி மாற்றுவதும், கிணற்றுக்கு கம்பி வேலி போடுவதும் என ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமாக நடித்து இருக்கிறார் கதாநாயகன் விதார்த்.
அந்த இறுதிக் காட்சியில் ரோட்டில் விழுந்து மரணம் அடையும் காட்சியில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை பதற வைக்கிறார்.
கதாநாயகன் விதார்த்க்கு நடிப்பு அசுரன் என பட்டம் கொடுக்கலாம்.
இந்த அஞ்சாமை திரைப்படத்தில் கதையின் நாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார்.
கதாநாயகி வாணி போஜனா இது? வளர்ந்த இரு பிள்ளைகளுக்கு அம்மாவாகவும் குடும்பத் தலைவியாகவும் பிள்ளைகளின் படிப்புக்காக கணவர் கதாநாயகன் விதார்த்திடம் சண்டை போடும் காட்சியில் அவருடைய நடிப்பிற்கு இந்தக் காட்சியில் மிகப்பெரிய அளவில் நடிப்பை கொடுத்து அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
கதாநாயகி வாணி போஜனின் நடிப்பு நமது நடிகைகள் சரிதா ரேவதியை ஞாபகப்படுத்தும் அளவிற்கு நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
அதுவும் தனது கணவன் இறந்த நேரத்தில் கண்கலங்கும் காட்சியில் கதாநாயகி வாணி போஜனின் நடிப்பு திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டார்.
கதாநாயகன் விதார்த் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரித்திக் மோகன் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
தனது தாயைப் பற்றி, நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தப்பாக பேசும் போது கிரித்திக் மோகனின் கண்ணில் காட்டும் அதிர்ச்சியை காண்பித்து அற்புதமான நடிப்பின் முலம் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நடிகர் ரகுமான் காவல்துறை அதிகாரியாக, வந்து கதாநாயகன் விதார்த் மற்றும் மகனுக்காக உதவி செய்த காரணத்தால் காவல்துறை அதிகாரி பணியை துறந்து வழக்கறிஞராக அவதாரம் எடுக்கும் நல் உள்ளம் கொண்டவராக நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் ஒளிப்பதிவு இயல்பாக, களத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் ஒளிப்பதிவின் மூலம் கிராமத்து காட்சிகளிலும் சரி, ஜெய்ப்பூர் காட்சிகளிலும் சரி கவனம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ராகவ் பிரசாத்தின் இசை, மற்றும் பாடல்கள் திரைப்படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்.
வசனங்கள் இல்லாத காட்சிகளில், பின்னணி இசையின் மூலம் உணர்வுகள் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
நமது தமிழ்நாட்டில் உள்ள மாணவ மாணவிகளின் நீட் தேர்வு காரணமாக அசிங்கங்கள் அவமானங்கள் இன்னல்களையும், இந்த நீட் தேர்வை வைத்து கோச்சிங் சென்டர்கள் எப்படி எல்லாம் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதையும் அப்படியே வெட்ட வெளிச்சமாக, அதேசமயம் மிகவும் யதார்த்தமாக தோலுரித்து காட்டும் விதமாக முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன்.
இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் ரகுமான் பேசும் ஒவ்வொரு வசனங்களும், தமிழக மக்கள் நமது தமிழக அரசிடம் முன்வைக்கும் நியாயமான கேள்விகளை மக்களின் வேதனையை உணர்த்தும் வசனங்களாக வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.சுப்புராமன்.
இப்படியா பட்ட சமூக பொறுப்புள்ள திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் திருச்சித்திரம் நிறுவனம் சார்பில் டாக்டர் எம். திருநாவுக்கரசு எம்.டி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
இப்படி ஒரு நல்ல திரைப்படத்தை வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்க நீட்டை ஆதரித்தாலும் சரி ஆதரிக்காவிட்டாலும் சரி தமிழக மக்களாகிய அனைவரும் இந்த அஞ்சாமை திரைப்படத்தை கண்டிப்பாக ஆதரித்தாக வேண்டும்.
மொத்தத்தில் – இந்த அஞ்சாமை திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம்.